தீர்ப்பு அளித்தல்
(லூக் 6:37-38, 41-42)
1 "பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்;
அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
2 நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.
நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ,
அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
[1]
3 உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல்
உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை
நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?
4 அல்லது அவரிடம்,
" உங்கள் கண்ணிலிருந்து துரும்பை எடுக்கட்டுமா?" என்று
எப்படிக் கேட்கலாம்?
இதோ! உங்கள் கண்ணில்தான் மரக்கட்டை இருக்கிறதே!
5 வெளிவேடக்காரரே,
முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள்.
அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து
துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.
6 தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்.
அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.
மேலும் உங்கள் முத்துகளைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம்;
எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்து விடும்.
வேண்டுதலின் விளைவு
(லூக் 11:9-13)
7 "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்;
தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்;
தேடுவோர் கண்டடைகின்றனர்;
தட்டுவோருக்குத் திறக்கப்படும்.
9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக்
கல்லைக் கொடுப்பாரா?
10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?
11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு
நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்.
அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை
தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!
பொன்விதி
(லூக் 6:31)
12 "ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம்
நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
[2]
இடுக்கமான வாயில்
(லூக் 13:24)
13 "இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்;
ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது;
அதன் வழியே செல்வோர் பலர்.
14 வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது;
இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.
போலி இறைவாக்கினர்
(லூக் 6:43-44)
15 "போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்.
ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர்.
ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.
16 அவர்களின் செயல்களைக் கொண்டே
அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள்.
முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ,
முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா?
17 நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்.
கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.
18 நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது.
கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.
19 நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு
நெருப்பில் எறியப்படும்.
[3]
20 இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென
அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.
சொல்லும் செயலும்
(லூக் 13:25-27)
21 "என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச்
சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.
மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி
செயல்படுபவரே செல்வர்.
22 அந்நாளில் பலர் என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே,
உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா?
உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா?
உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர்.
23 அதற்கு நான் அவர்களிடம்,
'உங்களை எனக்குத் தெரியவே தெரியாது.
நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்' என
வெளிப்படையாக அறிவிப்பேன்.
[4]
இருவகை அடித்தளங்கள்
(லூக் 6:47-49)
24 "ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு
இவற்றின்படி செயல்படுகிற எவரும்
பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.
25 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது;
அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை.
ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.
26 நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு
இவற்றின்படி செயல்படாத எவரும்
மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார்.
27 மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங் காற்று வீசியது;
அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது."
28 இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது
அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர்.
29 ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி
அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.[5]- குறிப்புகள்
[1] 7:2 - மாற் 4:24.
[2] 7:12 - லூக் 6:31.
[3] 7:19 - மத் 3:10; லூக் 3:9; யோவா 15:6.
[4] 7:23 - திபா 6:8.
[5] 7:28,29 - மாற் 1:22; லூக் 4:32; யோவா 7:15.